விரிவடையும் இந்துத்துவம்,‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ - அரவிந்தன் நீலகண்டன்

மானுடத்தின் மாற்று பாலினங்கள் குறித்த ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை பாஜக தலைவரான வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட ஒத்துக் கொண்டார். உடனடியாக இது ஊடகங்களில் ஆச்சரியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்துத்துவவாதிகள் என்றால் கட்டுப்பெட்டித்தனமானவர்கள் அல்லவா? பாஜக ஒரு வலதுசாரி கட்சியாயிற்றே. morning_hindutvaகலாச்சார பாதுகாவலர்கள் அல்லவா? அப்படி இருக்கும் போது இப்படி ஒரு புத்தகத்தை எப்படி வெளியிடலாம்? ஊடகக் கேள்விக்குறிகள்… ஆனால் உண்மை என்னவென்றால் நமது நாட்டில் ஒரு அதிசயமான அபத்த அரசியல் நடக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வலதுசாரிகள் போல இந்திய நாட்டின் வலதுசாரிகள் இருக்க வேண்டுமென்று நம் ஊடக புத்திசாலிகள் எதிர்பார்க்கிறார்கள். நம் அரசியல் அவதானிகள் ஐரோப்பிய அளவுகோல்களால் மட்டுமே இந்துத்துவத்தை அளக்கிறார்கள். ஆனால் ஹிந்துத்துவம் என்பது பாரத பண்பாட்டையும் மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டது எப்படி மேற்கத்திய வலதுசாரி சித்தாந்தம் ஆபிரகாமிய விரிவாக்க இறையியலை தன்னில் கொண்டுள்ளதோ அவ்வாறு. ஆபிரகாமிய இறையியல் பன்மையை வெறுக்கிறது. வேறுபாடுகளை அழித்தொழிக்க நினைக்கிறது. ஐரோப்பிய அமெரிக்க வரலாறுகளில் மாற்றுப்பாலின மக்கள் தொடர்ந்து இரக்கமில்லாமல் வேட்டையாடி அழிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக மட்டும் எந்த போதி மரத்தடியில் கிடைத்ததோ திடீரென மாற்றுப்பாலின உரிமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வு மேற்கில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்த அமெரிக்க ஞானம் என்ஜிஓக்களால் அட்டகாசமான பொருளாதார வலிமையுடன் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஹிட்லரும் ஸ்டாலினும் மாற்றுப்பாலின மக்களை கொன்றொழித்த போது வாய்மூடி மௌனித்த மேற்கத்திய மத பீடங்கள் இன்று அவர்களின் உரிமைகளுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார்கள். ஆத்ம அறுவடையே இறுதி இலக்கு என்பது சொல்லாமல் பெறப்படும்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாரத பண்பாட்டின் அனைத்து அம்சங்களையும் மலினப்படுத்தவும் உதாசீனப்படுத்தவும் கட்டம் கட்டி அவற்றை அழிக்கவும் நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். போலி பகுத்தறிவின் பெயரால், போலி மதச்சார்பின்மையின் பெயரால் போலி ஆன்மிகத்தின் பெயரால் அது நடந்து வருகிறது. இன்று நாம் காணும் பலவித சீர்கேடுகள் இவற்றின் விளைவுதான். ஆனால் இதற்கான பழியை மட்டும் மிக தெளிவாக இந்து தர்மத்தின் மீதும் பாரத பண்பாட்டின் மீதும் போட்டுவிடுவதில் நம் முற்போக்குகள் சமர்த்தர்கள். இதன் விளைவாக அமெரிக்க என்ஜிஓக்களின் கைக்கூலிகளாக இந்திய அறிவுசீவிகள் இயங்குகின்றனர். இந்த என்ஜிஓக்களோ மேற்கின் அரசதிகாரம் மதம் ஆகியவற்றின் பரப்புரையாளர்கள். மேற்கத்திய ஏகாதிபத்திய பதாகை தாங்கிகளின் பாதுகை தாங்கிகள்தான் இன்று உலாவரும் இந்திய இடதுசாரிகளில் பெரும்பாலானோர். இடதுசாரிகள் அனைவரும் இல்லை. அவர்களில் நேர்மையானவர்கள் அர்ப்பண உணர்வுடன் மானுடத்தின் நன்மைக்காக போராடுவோர் உண்டு. ஆனால் அவர்கள் கோஷங்களால் கவரப்பட்டு தவறான இயக்கங்களில் முடிந்துவிடுகின்றனர். அல்லது தனிமைப்பட்டு விடுகின்றனர். இருக்கும் இந்துத்துவத்தைவிட்டு இல்லாத ’இடம்’ தேடும் நேர்மையான இத்தகைய சிறுபான்மையிலும் சிறுபான்மை இடதுசாரிகள் பரிதாப ஜீவன்களும் கூட. அருகி வரும் உயிரினங்கள். இறுதியில் இவர்களையும் இந்துத்துவம்தான் காப்பாற்ற வேண்டும்.

இத்தகைய சூழலில்தான் சகோதரர் கோபி சங்கர் மாற்றுப்பாலினங்கள் குறித்த இந்த நூலை எழுதியுள்ளார். இதன் பண்பாட்டு வரலாற்று அரசியல் முக்கியத்துவம் கட்டாயமாக இந்து சமுதாயத்தால் உணரப்பட வேண்டும். கோபி சங்கர் தத்துவ மாணவர். gopi1ராமகிருஷ்ண-விவேகானந்த வேதாந்த பாரம்பரியத்தில் வேரூன்றியவர். மதுரையில் சிருஷ்டி எனும் தன்னார்வ இயக்கத்தை மாற்றுப்பாலின உரிமைகளுக்காக நடத்தி வருகிறார். இது மாணவர்களால் நடத்தப்படும் இயக்கம். மெக்காலே புத்தி தலைக்கேறிய நமக்கு நாம் மறந்துவிட்ட அல்லது தெரிந்து கொள்ள மறுக்கிறFrontநம் பண்பாட்டின் பக்கங்களை அவருடனான உரையாடல்கள் ஒவ்வொன்றும் நமக்கு திறந்து காட்டுகின்றன. நமக்கெல்லாம் தெரிந்த ஆண்-பெண், திருநங்கை-திருநம்பி ஆகிய பாலின வகைகளுக்கு அப்பால் 25 பாலினங்களை அவர் பட்டியலிடுகிறார். வலிமையான ஆண் உரு கொண்ட ஒரு மனிதர் குழந்தைக்கு பாலூட்டுவதை போன்ற ஓவியம் பல விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது. பாரத பண்பாட்டில் ஆண் உரு கொண்ட புருஷாமிருக ரிஷியின் பால் மந்திர தன்மையும் புனிதமும் கொண்டதாக ஐதீகங்களில் சொல்லப்படுவது நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த பிரச்சனைகள் ஏதோ எங்கோ மூலையில் நடப்பவை அல்ல என சொல்லுகிறார் கோபி சங்கர். தனிமனிதர்களை தீராத துயரத்தில் தள்ளி அவர்களின் சுயத்தை அழிக்கும் அவமானங்களில் தொடங்கி தேசத்தின் மரியாதையும் கௌரவத்தையுமே கேள்விக்குறியாக்கும் பிரச்சனைகள் இவை. இதற்கான வலிமையான வேதனையான எடுத்துக்காட்டுகளில் ஒன்று மட்டுமே சாந்தி சௌந்தரராஜனின் அண்மைக்கால துயரங்கள்.

சாந்தி சௌந்தரராஜன் பாரதத்தின் தடகள வீராங்கனை. தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த பெண்ணான இவர், 2003 முதல் 2006 வரை 14 சர்வதேச போட்டிகளில் பாரதத்துக்கு பதக்கங்களை வென்றிருக்கிறார். அவற்றில் நான்கு தங்க பதக்கங்கள். ஆனால் 2006 தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் வெள்ளி வென்ற பிறகு திடீரென அவரை ஒரு மருத்துவர் குழு அவரை பரிசீலித்தது. ரத்த பரிசோதனையுடன் அவரது ஆடைகளை கழற்றியும் பரிசோதித்தது. அந்த மருத்துவர் குழுவில் ஒருவர் கூட சாந்தி சௌந்தரராஜன் எனும் சர்வதேச தடகள வீராங்கனையின் தாய்மொழி பேசுகிறவர் இல்லை. மறுநாள் எவ்வித விளக்கமும் இன்றி அவர் ஆசிய விளையாட்டு அரங்கையும் தங்குமிடங்களையும் விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவமானத்துடன் தாயகம் வந்து சேர்ந்த பிறகுதான் அவருக்குத் தெரியும் அவர் ஆண் என்று சர்வதேச தடகள போட்டியாளர்களுக்கான அமைப்பு (International Association of Athletics Federation) இதை கூறியதை இந்திய ஒலிம்பிக் மையம் அப்படியே ஏற்றுக் கொண்டது. கூட்டுச்செயலர் லலித் பன்னோத் சாந்தி சௌந்தரராஜனுக்கு ஆங்கிலத்தில் தெரிவித்தார். ’நீங்கள் இனி எந்த போட்டியிலும் கலந்து கொள்ள இயலாது.’.
santhi_swamiji South African athlete Caster Semenyaஅன்று இந்தியாவின் விளையாட்டுத்துறையில் கோலோச்சிய சுரேஷ் கல்மாதிக்கு வேறு முக்கிய முதன்மை வேலைகள் இருந்தன. எனவே இந்த பிரச்சனையில் அவரால் கவனம் செலுத்த இயலவில்லை. தொடர்ந்து அவமானங்கள், தேசமே கைவிட்ட நிலை என விரக்தியினால் சாந்தி தற்கொலை செய்ய முயன்று அவர் மரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்டார். இதே போல அடுத்த சர்வதேச நிகழ்வு ஒன்று இந்திய கையாலாகாத்தனத்தை நம் அனைவரின் முகத்திலும் அறைந்து காட்டியது. 2009 இல் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யா பெர்லின் இதே போல அவரது பதக்கத்தை இழக்க வைக்கப்பட்டார். இதே காரணங்கள் சொல்லப்பட்டன.. ஆனால் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவும் மக்கள் முதல் பிரதமர் வரை அவரை ஆதரித்தனர். கடுமையாக IAAF அமைப்பை கண்டனம் செய்தனர். இதன் விளைவாக அந்த அமைப்பு தன் தடையை பின்வலித்துக் கொண்டது. 2012 ஒலிம்பிக்ஸில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்தும் பெருமை காஸ்டர் செமன்யாவுக்கு அளிக்கப்பட்டது. காலவதியாகிப் போன மருத்துவ சட்டகங்களால் பாலினங்களை அடையாளப்படுத்தும் சூழ்நிலையின் பலியாகி நிற்கிறார் சாந்தி சௌந்தரராஜன். எனினும் செமன்யா விவகாரம் எழுந்த போது சாந்தியின் குரல் செமன்யாவுக்கு ஆதரவாக சர்வதேச ஊடகங்களில் வெளிப்பட்டது. இன்று தடகள வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராக பட்டயப்படிப்பை சாந்தி முடித்துள்ளார். இவருக்கு மத்திய அரசில் தடகள வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராகும் தகுதி உள்ளது. தேசத்திற்காக ஓடி வென்று தேசத்தால் கைவிடப்பட்டு சர்வதேச அளவில் அவமானப்படுத்தப்பட்ட இந்த வீராங்கனைக்கு தேசபக்தி இயக்கத்தில் வளர்ந்த ஒரு மத்திய அரசு உதவ வேண்டியது கடமையாக உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் வீரரும் இன்று பாரதிய ஜனதா பாராளுமன்ற உறுப்பினருமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் சாந்திக்காகக் குரல் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியமானதாகும்.

இதற்காக கோபிசங்கர் முயற்சிகள் மேற்கொண்ட போது அதனை இதயத்துடன் கேட்டு உதவிக்கரம் நீட்டியவர் பாஜக தலைவரான திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள். எனவே மாற்றுப்பாலினங்கள் அவர்களின் பண்பாட்டு மூலதனம் அவர்களின் சமுதாய பிரச்சனைகள் ஆகியவற்றை குறித்த நூலை வெளியிட கோபி அவர்களுக்கு இயல்பாக அவர் நினைவு வந்தது இயற்கையே. ராதா ராணி வழிபாடு, அரவான் சடங்குகள், அர்த்த நாரீஸ்வர வழிபாடு, பகுசரா மாதா வழிபாடு ஆகிய ஆன்மிக பண்பாட்டு சடங்குகள் இன்று வெளிநாட்டு என்ஜிஓக்களின் மேற்கத்திய சட்டக பார்வையால் தன் தனித்தன்மையை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ளன. இவை தன் ஆன்மிக உள்ளீட்டுத்தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதை கோபி சங்கர் சொல்கிறார்.vanathiji_book_releaseஇந்துத்துவம் என்பது குறுகிய விக்டோரிய போலி-ஒழுக்க விதிகளின் பாரத முலாம் பூசப்பட்ட கருத்தியல் அல்ல என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பவர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள். எனவே இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் அதன் அனைத்து பரிமாணங்களிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் – குறிப்பாக கட்சியின் இளைய தலைமுறையினரால் என்பதால் அவர் இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு தமது பல வேலைகளுக்கு நடுவிலும் -உடனடியாக நேரம் ஒதுக்கி- சம்மதம் அளித்தார். தமிழ்ஹிந்து.காம் என்றைக்கும் காலனியத்தாலும் சமூக தேக்கநிலையினாலும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பாரதியர்களுக்காக குரல் கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருக்கிறது என்பதால் உடனடியாக இதனை தம் கடமையாகவே எண்ணி தமிழ்ஹிந்து.காம் இந்த புத்தக வெளியீட்டை இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தனது ஸ்டாலில் செய்யுமாறு கோபி சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டது. அவரும் அன்புடன் அதற்கு சம்மதம் அளித்தார். ஏற்பாடுகள் மிக எளிமையாகவே இருந்தன. வந்தவர்களுக்கு ஒரு தேனீர் வழங்கும் ஏற்பாட்டைக் கூட செய்ய நேரம் இருக்கவில்லை. ஆனால் பொதுவாக அரசியல்வாதிகளுக்குரிய படோடபம் எதுவும் இல்லாமல் மத்திய ஆளுங்கட்சியின் மாநில பொது செயலாளரான திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மிகவும் இயல்பாகவும் எளிமையாகவும் வந்து பங்கு பெற்றது ஒரு சந்தோஷமான அதிர்ச்சியாக இருந்தது. அரசியல்வாதிகளைக் குறித்த பொதுபிம்பங்களை ஆக்கபூர்வமான முறையில் உடைத்து வருகின்றனர். அத்துடன் அவரது உரையும் சிறப்பாக அமைந்திருந்தது. மாற்றுப்பாலினங்களின் உரிமைகள், அவர்கள் சந்திக்கும் சமுதாய உளவியல் பிரச்சனைகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு அவசியம் என்கிற முறையில் அதை தெரிந்து கொள்வதற்காக தாம் அங்கு வந்திருப்பதாக அவர் கூறினார். இந்த பிரச்சனைகளை குறித்து மத்திய அரசில் உள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார். அவர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்த ஊடக ஆச்சரியங்கள் இதுவரை இந்துத்துவம் குறித்து உருவாக்கப்பட்ட தவறான ஊடக புரிந்தல்களாலும் முன்முடிவுகளாலும் ஏற்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார். நூல் வெளியீட்டு விழாவிற்கு சாந்தி சௌந்தரராஜன் அவர்களின் பிரச்சனைகளை அவர் எடுத்துக் கூறினார்

இது ஒரு முக்கியமான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. மானுட பன்மையை அதன் அனைத்து தளங்களிலும் பேணும் இயக்கமாக சர்வதேச அளவில் இந்துத்துவம் விரிவடைகிறது. இதனை சாத்தியமாக்கிய இளம் எழுத்தாளர் கோபி சங்கர், பாஜக மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் தளம் ஆகியவற்றுக்கு இதயபூர்வமான நன்றி. 

For more details: http://www.tamilhindu.com/
Originally Published on tamilhindu.com website on July 11, 2014

No comments:

Post a Comment